×

மழையால் சேறும் சகதியாக மாறிய சந்தை: பொய்கையில் மாடுகள் வரத்து குறைந்தது

வேலூர்: தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த வாரத்தைவிட மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. ஆயிரத்துக்கும் குறைவாக மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

குறிப்பாக கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த வாரம் ₹80 லட்சத்துக்கு குறைவாக இருந்த வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் மழையின் காரணமாக மாட்டு சந்தை முழுவதும் சேறும், சகதியாக காணப்பட்டது. மேலும் கொசுக்கடியால் விவசாயிகள், வியபாரிகள் அவதிக்கு ஆளாகினர். அங்கேங்கே மழைநீர் தேங்கி இருந்ததால் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் மாட்டு சந்தை கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மழையால் சேறும் சகதியாக மாறிய சந்தை: பொய்கையில் மாடுகள் வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Poigai ,Vellore ,Poigai Cattle Market ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொய்கை மாட்டு சந்தையில் ₹1.50 கோடி வர்த்தகம்