×

நெல்லை மாவட்டம் திசையன்விளை இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்றாம் நபர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை 19 வயது இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்றாம் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மது அருந்தியபோது தகராறில் நண்பர்களால் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் இருவரை கைது செய்த நிலையில் தற்போது தேடப்பட்டு வந்த மூன்றாம் நபரும் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் 19 வயது முத்தையா. இவர் அங்குள்ள திருமண அழைப்பிதழ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பல முறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்பு முத்தையா வீட்டிற்கு அவருடைய காதலி வந்துள்ளார். இருவரும் சகஜமாக பேசியுள்ளனர். பின்பு காதலியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று அவர் வீட்டில் விட்டுள்ளார். தொடர்ந்து, முத்தையாவை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் முத்தையாவின் சகோதரர் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, வீட்டிற்கு அருகே ஓடை பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் முத்தையா சடலமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்தையாவின் சடலத்தை மீட்டு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 19 வயது இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா என டிஎஸ்பிகள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் முத்தையாவை நண்பர்களே சேர்ந்து கொன்றது விசாரணையில் அம்பலமானது.

நண்பரின் தங்கையை முத்தையா கேலி செய்ததால் 3 பேர் சேர்ந்து அவரை கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முத்தையா கொலை வழக்கில் திசையன்விளையை சேர்ந்த சுரேஷ், மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post நெல்லை மாவட்டம் திசையன்விளை இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்றாம் நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Vekyanvilai ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் இன்று காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்