×

சேத்துப்பட்டு பகுதியில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

* திருவண்ணாமலை போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு
* பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5 லட்சம் இழப்பீடு

திருவண்ணாமலை, ஜூலை 25: சேத்துப்பட்டு பகுதியில் 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த அருந்ததிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(30), கூலித்தொழிலாளி. இவர், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கடந்த 1.10.2015 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போளூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலையில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு ேகார்ட்டில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில், அரசு தரப்பில் சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் பிரபாகரனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் பிரபாகரனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சேத்துப்பட்டு பகுதியில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Chetupatta ,Tiruvannamalai ,POCSO Court ,Thiruvannamalai ,Sethupattu ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்