×

மெரினா கடற்கரைக்கு நண்பருடன் வந்தபோது ஆயுதப்படை காவலர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: குதிரையோட்டி கைது

துரைப்பாக்கம்: மெரினா கடற்கரைக்கு நண்பருடன் வந்த ஆயுதப்படை காவலரை, இரும்பு கம்பியால் தாக்கிய குதிரையோட்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை திருநின்றவூர் சுதேசி நகர் காவேரி தெருவை சேர்ந்தவர் தீபக் (27). இவர் தமிழ்நாடு காவல்துறையின் ஆவடி சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். வார இறுதி நாட்கள் என்பதால் தீபக் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைக்கு வந்தார். கடற்கரையில் சிறிது நேரம் இருந்துவிட்டு நண்பருடன் கலங்கரைவிளக்கம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, குதிரை ஒன்று தீபக் அமர்ந்து இருக்கும் பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இதனால், தீபக் குதிரையோட்டியிடம் சற்று தொலைவில் குதிரையை ஓட்டும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி காவலர் தீபக் குதிரையோட்டியை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த குதிரையோட்டி கையில் ைவத்திருந்த இரும்பு கம்பியால் தீபக்கை சரமாரியாக அடித்துவிட்டு குதிரையில் தப்பி ஓடிவிட்டார்.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த காவலர் தீபக்கை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரது நண்பர் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அதை தொடர்ந்து காவலர் தீபக், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், மெரினா கடற்கரையில் குதிரையோட்டும் பெரம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கிஷோர் (20) காவலரை தாக்கியது தெரியவந்தது. போலீசார் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

The post மெரினா கடற்கரைக்கு நண்பருடன் வந்தபோது ஆயுதப்படை காவலர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: குதிரையோட்டி கைது appeared first on Dinakaran.

Tags : Armed force ,Marina beach ,Horseman ,Duraipakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...