×

மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம் கறிக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய ரவுடி: மருத்துவமனையில் அனுமதி

குன்றத்தூர்: பழைய பல்லாவரம், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). இவர், கச்சேரி மலைரோடு பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாதவன் கடையில் இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், நான் இந்த பகுதியில் பிரபல ரவுடி. இங்கு வியாபாரம் நடத்த வேண்டும் என்றால் எனக்கு தினமும் 50 ரூபாய் மாமூல் தர வேண்டும், என்று மிரட்டியுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து மாதவன் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினார். இதில், படுகாயமடைந்த மாதவனை கடை ஊழியர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், மாதவனை கொடூரமாக தாக்கியது திரிசூலம் பச்சையம்மன் நகரை சேர்ந்த ஐயப்பன் (22) என்பதும், இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம் கறிக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய ரவுடி: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kunrathur ,Madhavan ,Kannapiran Street, Old Pallavaram ,Kacheri Hill Road ,Dinakaran ,
× RELATED தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி