×

இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பதுதான் மோடி ஆட்சி

மதுரை: இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பதுதான் மோடி ஆட்சி. மணிப்பூர் சம்பவத்தால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சீதாராம் யெச்சூரி தெரிவித்து உள்ளார். மதுரை, முனிச்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: இந்திய கூட்டாட்சி மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது. நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை, எல்லோருக்கும் சம உரிமை என்பதே கூட்டாட்சியாக உள்ளது. ஆனால், இரட்டை இன்ஜினாக உள்ள மோடி ஆட்சி இரு சமூகங்களை நேருக்கு நேர் நிறுத்தி பற்றி எரியச்செய்யும் வகையில் செயல்படுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகாத நாட்களே இல்லை.ஒரே நாடு, ஓரே ஆட்சி, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்பதை நம் மீது திணிக்க முயற்சிக்கின்றனர். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா கிடையாது. ஆனால் அந்த உணர்வின்றி மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆளுநர்கள் என்ற பெயரில் பாஜவின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின்றனர். தற்போது ஒன்றிய அரசு பொதுப்பட்டியலை கடந்து, மாநில பட்டியலில் உள்ள துறைகளை கைப்பற்ற தன்னிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநிலங்கள் மீது அப்பட்டமான நிதி அதிகார மீறல்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பதுதான் மோடி ஆட்சி appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Madurai ,Sitaram ,Manipur ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி