×

அட்டப்பாடி அருகே கடை ஷட்டர் உடைத்து துணிகர திருட்டு: 2 வாலிபர்கள் கைது

 

பாலக்காடு, ஜூலை 24: அட்டப்பாடி அகழி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாவளம் பகுதியில் மொபைல் போன் கடையின் ஷட்டர் உடைத்து 3 மொபைல் போன்கள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகழி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியான தாவளத்தில் மொபைல் கடை மற்றும் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மொபைல் கடையில் கடந்த 2 நாட்கள் முன்பு இரவில் வாலிபர்கள் இருவர் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து 3 மொபைல் போன்கள் மற்றும் டிராவிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அகழி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தார். அகழி டிஎஸ்பி முரளிதரன், எஸ்ஐ முரளி, கிருஷ்ணதாஸ் ஆகியோர் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை சிசிடிவி கேமிராக்கள் மூலம் அடையாளம் கண்டு பிடித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அகழி போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில், டவுன் பகுதியில் பைக்கில் இரு வாலிபர்களை தடுத்து விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

சந்தேகமடைந்த போலீசார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலூரை சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார் (21), சாலக்குடியை சேர்ந்த மணிகண்டன் மகன் சச்சின் (26) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கஞ்சா, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், சிவக்குமார் போக்சோ வழக்கிலும் தொடர்புடையவர் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து, அகழி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அட்டப்பாடி அருகே கடை ஷட்டர் உடைத்து துணிகர திருட்டு: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Attapadi ,Palakkad ,Thavalam ,Attappadi Aghazi Gram Panchayat ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது