×

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிகளவில் வளரும் மருத்துவக்குணம் கொண்ட உமரி கீரை

தஞ்சாவூர், ஜூலை 23: அதிராம்பட்டினம் கடல் பகுதியில் உவர் நீரில் மருத்துவ குணம் கொண்ட உமரி கீரை அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த கீரையை மீனவர்கள் உணவாக பயன்படுத்தி வருகின்றனர். அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட உமரிகீரை பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்களில் அதிகளவு வளர்கிறது. அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் வெளிவயல் ஆகிய கடற்கரையை ஒட்டிய சதுப்பு நிலப்ப குதியில் உவர் நீரில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட மூலிகை கீரையாகும். அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மீனவர்களும், விவசாயிகளும் இந்த உமரி கீரையை பறித்து உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

கடந்த 60 வருடங்களுக்கு முன் அதிராம்பட்டினம் பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, இந்த உமரி கீரையைத்தான் மக்கள் சமைத்து உணவாக உட்கொண்டனர். அந்த பழக்கம் தொன்றுதொட்டு இன்றும் தொடர்கிறது. சில வீடுகளில் வாரம் ஒரு முறையாவது உமரிகீரையை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சுற்றி பார்க்க வரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உமரி கீரையில் பல வண்ணங்களை பார்த்து ரசித்தும், அதை பறித்து அதில் உள்ள உப்பு தன்மையும் அறிந்து செல்கின்றனர். இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், 60 வருடங்களுக்கு முன்னால் உணவு பஞ்சம் ஏற்பட்ட போது கடற்பகுதியில் உள்ள மக்களுக்கு உமரிகீரை உணவாக பயன்பட்டது.

இந்த உமரிகீரையை சாப்பிட்டால் உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கும். உடலில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையாக வைத்து கொள்ளும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும். வயிற்றிலுள்ள கீரிபுச்சியை வெளியேற்றும். வாய்வு கோளாறு, செரிமான கோளாறு ஆகியவற்றை சரி செய்யும். இந்த கீரை மூலம் உமரிபுட்டு, உமரிரசம், உமரிசாம்பார் ஆகியவை தயார் செய்யலாம். மஞ்சள், பச்சை ஆகியவற்றில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது. சிகப்பு நிறத்தில் உள்ள உமரி கீரையில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். சிவப்பு நிற உமரி கீரை வளர்வது அரிது. இது அதிக அளவில் வளராது. தற்போது பாஸ்ட் புட் வந்த பிறகு பழைய நடைமுறையில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் மறைந்து விட்டது. இதனால் உமரிக்கீரையை பயன்படுத்தி வருவோர் எண்ணிக்கை மிககுறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிகளவில் வளரும் மருத்துவக்குணம் கொண்ட உமரி கீரை appeared first on Dinakaran.

Tags : Athirampatnam ,Thanjavur ,
× RELATED வானம் மேகமூட்டம், திடீர் மழையால்...