×

ஆட்டோ டிரைவரை வெட்டிய வழக்கு போலீசார் விரட்டியபோது தப்பியோடிய 2 பேரின் கை உடைந்தது 4 பேர் கைது: வியாசர்பாடியில் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் மணியம்மை நகர் பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (எ)பெல் (39). இவர் ஆட்டோ டிரைவர். இவர் மீது 16 வழக்குகள் உள்ளன. திருவிக. நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில், தீட்டி தோட்டம் 4வது தெருவில் நின்றபோது ஆட்டோவில் வந்த 6 பேர், கமலக்கண்ணனை சரமாரியாக வெட்டி தப்பினர். இதில் படுகாயம் அடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவிக.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மூலக்கடை பகுதிக்கு ஆட்டோ ஓட்டி வரும்போது அதே இடத்தில் கொளத்தூர் யுனைடெட் காலனி 2வது தெருவை சேர்ந்த வினோத் (எ)ஓணான் (39) என்பவரும் ஆட்டோ ஓட்டியுள்ளார். இதில் இவர்கள் இடையே சவாரி ஏற்றுவதில் பிரச்னை ஏற்பட்டு வினோத் தனது ஆட்களை அழைத்துவந்து கமலக்கண்ணனை வெட்டினர் என்று தெரிந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு உத்தரவின்படி, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இன்று காலை வியாசர்பாடி கூட் செட் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்படி, இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, வானமாமலை, எஸ் ஐ ரவி உள்ளிட்டவர்கள் சென்று அங்கு மறைந்திருந்த வினோத் மற்றும் அவரது நண்பர்களை சுற்றிவளைத்தனர். அப்போது தப்பியோட முயன்றவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

அப்போது முக்கிய குற்றவாளியான கொளத்தூர் யுனைடெட் காலனி பகுதியை சேர்ந்த வினோத் என்கின்ற ஓணான், அவரது நண்பர் பிரேம்குமார் என்கிற பிளேடு பிரேம் ஆகியோரின் கைககள் உடைந்தது. இதனால் அவர்கள் இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். இதில் சிக்கிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஈசாக் (23), விக்னேஸ்வரன் (எ) குள்ள விக்னேஷ் (30), அகரம் பகுதியைச் சேர்ந்த சுபயர் (23), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சசிகுமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆட்டோ டிரைவரை வெட்டிய வழக்கு போலீசார் விரட்டியபோது தப்பியோடிய 2 பேரின் கை உடைந்தது 4 பேர் கைது: வியாசர்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vyasarbadi ,Perampur ,Kamalakannan (A) Bell ,Paper Mills Road ,Chennai Perampur Maniyam Nagar ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது