×

மாநில அரசு கடந்த வாரம் அனுமதி அளித்த நிலையில் தாராவி திட்டத்தை அதானிக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு: மும்பை உயர் நீதிமன்றத்தில் துபாய் நிறுவனம் தாக்கல்

மும்பை: தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கான டெண்டர் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து துபாயை சேர்ந்த எஸ்.டி.சி. நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2019ம் ஆண்டு தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கான டெண்டர் கோரப்பட்டது. அப்போது அதானி நிறுவனம், துபாய் நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள் டெண்டர் கோரின. இதில் துபாய் நிறுவனம் டெண்டரில் வெற்றி பெற்றது. ஆனால் தாராவி மேம்பாட்டு திட்டத்தில் 46 ஏக்கர் ரயில்வே நிலத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனால் துபாய் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. 2020ம் ஆண்டு உத்தவ் தாக்கரே ஆட்சியில் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. 2022ம் ஆண்டு மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியம் இந்த டெண்டரை அதானி நிறுவனத்துக்கு வழங்கியது. இதனை எதிர்த்து துபாய் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி மனு மீது விசாரணை அன்றே நடந்தது. அப்போது தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு மேற்கொள்வதற்கான உத்தரவு இன்னமும் வழங்கப்படவில்லை என்று மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியம் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது பற்றி அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார். அப்போது, இந்த டெண்டர் தொடர்பாக அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அணுகுமாறு துபாய் நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தாராவி அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கு அதானி நிறுவனத்துக்கு மாநில அரசு முறையான அனுமதியை வழங்கியது. இந்த மாதம் 13ம் தேதி இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துபாய் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அதானி நிறுவனத்துக்கு தாராவி மேம்பாட்டு திட்ட டெண்டர் முறையாக வழங்கப்பட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஒரு வாரத்தில் திருத்தம் செய்ய அனுமதித்தது. மேலும் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post மாநில அரசு கடந்த வாரம் அனுமதி அளித்த நிலையில் தாராவி திட்டத்தை அதானிக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு: மும்பை உயர் நீதிமன்றத்தில் துபாய் நிறுவனம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Dharavi ,Adani ,government ,Dubai ,Bombay High Court ,MUMBAI ,STC ,Mumbai High Court ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்