×

எடப்பாடி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரிக்க தேவையில்லை: புதிய புகார் தர ஆர்.எஸ்.பாரதிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி புகாரில் முகாந்திரம் இல்லை என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்று கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை. மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளார் என்று வாதிட்டார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவை நீதிபதி நேற்று பிறப்பித்த நீதிபதி, டெண்டர் முறைகேடு தொடர்பாக புதிய விசாரணை தேவையில்லை. ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் மாற்றத்தைத் காரணம் காட்டி மீண்டும் விசாரிக்க கோர முடியாது என்று உத்தரவிட்டு மீண்டும் விசாரிக்க கோரிய ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேநேரம் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரினால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் எடப்பாடி பழனிசாமி மீது சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் புதிய புகார் மனு தரலாம் என்று உத்தரவிட்டார்.

The post எடப்பாடி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரிக்க தேவையில்லை: புதிய புகார் தர ஆர்.எஸ்.பாரதிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Anti-Corruption Bureau ,RS Bharti ,Chennai ,AIADMK ,
× RELATED ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!!