×

பரமத்திவேலூர் அருகே சோகம் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே, குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அடுத்த வெட்டுக்காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்(30), விவசாயி. இவரது மனைவி சசிகலா(26). இவர்களுக்கு திவித்(5), தர்ஷன்(3) என்ற மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும், வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று காலை 6 மணியளவில், சசிகலா தனது குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து வெளியேறினார். இதனிடையே, முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே நடந்த தகராறு குறித்து அறிந்த சசிகலாவின் தந்தை பழனிசாமி, அதிகாலை 6.30 மணிக்கு மகள் வீட்டிற்கு சமாதானம் பேச வந்தார்.

அங்கு தனசேகரன் மட்டும் தூங்கி கொண்டிருந்தார். சசிகலா மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர், வெளியே வந்து மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை தேடினார். அப்ேபாது, தனசேகரனின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது, அங்கு சசிகலாவின் செருப்பு கிடந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர், கிணற்றில் எட்டி பார்த்த போது, அங்கு குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோர் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டிற்கு சென்று மருமகன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன், கிணற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் சசிகலாவின் சடலங்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறில் மனமுடைந்த சசிகலா, குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை எதுவும் காரணமா? என திருச்செங்கோடு ஆர்டிஓ(பொ) ரமேஷ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பரமத்திவேலூர் அருகே சோகம் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Paramativelur ,
× RELATED பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி...