மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் செல்லும்போது, பல்வேறு மலைகளை தாண்டி, குகைகளை தாண்டி, அருவிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான பள்ளத்தாக்குகள், இதமான சூழ்நிலை உள்ளிட்டவற்றை அனுபவிப்பதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். மேலும், கடந்த 2005ம் ஆண்டு நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று தற்போது 18 ஆண்டுகள் நிறைவுபெற்று 19ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரயில் காலடி எடுத்து வைத்துள்ளது. சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயிலில் அதிநவீன வசதிகளுடன் சென்னை பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரயில் இயக்கத்தை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மலை ரயிலில் 184 பயணிகள் பயணம் செய்தனர். முன்னதாக யுனஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
The post அதிநவீன வசதி பெட்டிகளுடன் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம் appeared first on Dinakaran.