×

போதையில் கட்டையுடன் வந்து வழிமறித்தார் அரசு பஸ் முகப்பு விளக்கை அடித்து நொறுக்கிய ஆசாமி

*செங்கம் அருகே பரபரப்பு

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஸ் நிலையத்தில் இருந்து குப்பநத்தம் பகுதிக்கு நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கொட்டாவூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, போதை ஆசாமி ஒருவர் கையில் கட்டையுடன் பஸ் முன்புறம் வந்து திடீரென வழிமறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அந்த ஆசாமி மீது மோதாமல் இருக்க உடனடியாக பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார்.

அப்போது அந்த ஆசாமி கையில் வைத்திருந்த கட்டையை கொண்டு பஸ்சின் முன்புறம் உள்ள முகப்பு விளக்கை அடித்து நொறுக்கினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். சிலர் பஸ்சை விட்டு உடனே கீழே இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பஸ் டிரைவர் டிரைவர் எழில்மாறன், கண்டக்டர் ராமன் ஆகியோர் உடனே கீழே இறங்கி அந்த ஆசாமியை பிடித்து மேலும் பஸ்சிற்கு சேதம் ஏற்படாதபடி தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பணிமனை மேலாளர் சேட்டு செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரித்ததில் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(35) என்பது தெரியவந்தது. குடிபோதையில் பிரபாகரன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் முகப்பு விளக்கு உடைக்கப்பட்டதால், பஸ் இயக்க முடியாமல் பணிமனைக்கு சரி செய்ய எடுத்து செல்லப்பட்டது.

The post போதையில் கட்டையுடன் வந்து வழிமறித்தார் அரசு பஸ் முகப்பு விளக்கை அடித்து நொறுக்கிய ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Asami ,Chengam ,Thiruvannamalai District ,station ,Kuphanatham ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...