×

மாநகர பேருந்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி: டிரைவர் கைது

அண்ணாநகர்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19). கோயம்பேட்டில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக, இவர் கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகம் எதிரே உள்ள நிறுத்தத்தில் மாநகர பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது வள்ளலார் நகர் செல்லும் மாநகர பேருந்து வந்து நின்றது. அதன் முன்பக்க படிக்கட்டு வழியாக சூர்யா ஏற முயன்றபோது, திடீரென பேருந்தை டிரைவர் வேகமாக எடுக்கவே, சூர்யா நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பேருந்தின் பின்சக்கரம் அவர்மீது ஏறி இறங்கியதில், படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து சூர்யாவை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சூர்யா பலியானார். இதை தொடர்ந்து, சூர்யாவின் சடலத்தை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த மாநகர பேருந்து டிரைவர் வெங்கடேசனை (57) கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post மாநகர பேருந்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Annagar ,Surya ,Pleyanthopa ,Coimpet ,Kam ,Dinakaran ,
× RELATED திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?