பட்டிவீரன்பட்டி : ஆத்தூர் அருகே சித்தையன்கோட்டை பகுதியல் 13ம் நூற்றாண்டை சேர்ந்த நவகண்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.ஆத்தூர் நாடு வரலாறு ஆய்வு மையத்தை சேர்ந்த முனைவர் மாணிக்கராஜ், ஆசிரியர்கள் கருப்பையா, ராமு, சுப்பு, உலகநாதபாண்டியன் ஆகியோர் தலைமையில் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி. ஆத்தூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம் பகுதிகளில் தொல்லியல் சார்ந்த மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சித்தையன்கோட்டை சிவன் கோயில் அருகே இரு நவகண்ட சிற்பங்கள் புதிதாக கண்டறியப்பட்டது.
இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட ஆசிரியர்கள் கூறியதாவது: பிற்கால பாண்டியர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை நிர்வாக வசதிக்காக பல்வேறு நாட்டு பிரிவுகளாக பிரித்திருந்தனர். அதன்படி, சித்தையன்கோட்டையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் ஆற்றூர் நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த இருவீரர்களின் வீரமரணத்திற்காக இந்த நவகண்ட சிற்பங்கள் இருந்ததாக தெரியவருகிறது.
மேலும் மன்னர்கள் நலன், மன்னர்களின் குடும்ப நலன் போரில் வெற்றி பெற திருவிழா தேரோட்டம் தடையின்றி நடைபெற போன்ற காரியங்களுக்காக துர்க்கை, கொற்றவை தெய்வத்திற்கு முன் தங்களை தாங்களே பலியிட்டு கொள்வது, தொன்று தொட்டு வரும் பழமையான வீரமரபு ஆகும். நவகண்ட பலி பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்கான சிலப்பதிகாரம், கலிகத்துப்பரணி, தக்கையாகபரணி போன்றவற்றிலும், கோயில் கல்வெட்டுகளிலும் கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள இரு நவகண்ட சிற்பத்தில் ஒன்று இருகைகளாலும் வலை கொண்டு கழுத்தை அறுப்பது போல் உள்ளது. வீரன் ஆடை ஆபரணங்களோடு காணப்படுகிறான். தலை வீர வாளால் ஒரே வெட்டில் வெட்டப்பட்டது போல் காணப்படுகிறது. 2வது நவகண்ட சிற்பம் ஆலிடாசன நிலையில் இடையில் குறுவாளோடு காட்டப்பட்டுள்ளது. 2 சிற்பங்களுமே புடைப்பு சிற்பங்களாக இல்லாமல் தனி கல்லில் காணப்படுகிறது. இதை பிற்கால பாண்டியர்கள் காலமான 13ம் நூற்றாண்டு சிற்பங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
The post ஆத்தூர் சித்தையன்கோட்டையில் 13ம் நூற்றாண்டு நவகண்ட சிற்பங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.