×

ஜெயங்கொண்டம் லோக் அதாலத் 183 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு

 

ஜெயங்கொண்டம், ஜூலை 14: ஜெயங்கொண்டம் லோக் அதாலத் நடைபெற்றதில் 183 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய கிறிஸ்டோபர் உத்திரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன், இந்த மக்கள் நீதிமன்றத்தினை தலைமையேற்று நடத்தினார்.

இதில் 183 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ( JLPP நிலம் எடுப்பு) வேலுமணி மற்றும் தேவகி ஆகியோர் கூறினர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் லோக் அதாலத் 183 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Jayangkondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில்...