×

கூடுவாஞ்சேரி அருகே சோகம் கணவன், மனைவி தற்கொலை: கடன் தொல்லையா என போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நகரில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கருத்தோவியன் (62). இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மஞ்சுளா (55), மகன்கள் பிரபாகரன் (33), பிரசாந்த் (32) ஆகியோர் உள்ளனர். இதில், முதல் மகன் பிரபாகரனுக்கு திருமணம் நடத்த வங்கி கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரிடம் பெருந்தொகை வாங்கி திருமணம் நடத்தி உள்ளனர். இந்நிலையில், வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் தம்பதியினர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதேப்போன்று, 2வது மகன் பிரசாந்த்துக்கு திருமண ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், 2வது மகனின் திருமண செலவிற்காக கடன் வாங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. இதில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப ேகட்டு தொல்லை கொடுத்து வந்த நிலையில், இருவரும் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், திருமணமான அண்ணன் பிரபாகரனின் வீட்டில், தம்பி பிரசாந்த் தங்கி வந்துள்ளார். தாய், தந்தை குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே தான் இவர்களும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தம்பதியினர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.

இதனை தொடர்ந்து, நேற்று காலை 9 மணி ஆகியும் இருவரும் எழுந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த 2வது மகன் பிரசாந்த் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பிரசாந்த் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, தனது தந்தை கருத்தோவியன் தூக்கில் தொங்கியபடியும், அம்மா தூக்கு மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியினர் கடன் தொல்லையால்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post கூடுவாஞ்சேரி அருகே சோகம் கணவன், மனைவி தற்கொலை: கடன் தொல்லையா என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gootuwancheri ,Kootuwancheri ,Saraswathi ,Swamy Nagar ,Cheri ,
× RELATED சங்கரராமன் கொலை வழக்கில்...