×

மேய்ச்சலுக்கு வந்த போது தீனி கொடுத்து காரில் ஆடு திருடி சென்ற பெண் உள்பட 3 பேர் கைது

புழல்: செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் இரவு நேரங்களில் பட்டியில் அடைக்கப்படும் ஆடு, மாடுகளை ஒரு மர்ம கும்பல் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து திருடி செல்வது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், செங்குன்றம் அருகே அலமாதி, காமராஜர் தெருவை சேர்ந்த உதயகுமார் (18) என்பவர், கடந்த மாதம் 24ம் தேதி ஊராட்சி அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான 3 சினை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் மாலை உதயகுமார் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த 3 ஆடுகளும் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து, ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அவர் ஆய்வு செய்தார். இதில், அவருக்கு சொந்தமான 3 ஆடுகளை காரில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேர் திருடிச்செல்வது தெரியவந்தது. புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் கார் மற்றும் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

முதல்கட்ட விசாரணையில், பூந்தமல்லி அருகே திருமழிசை, ஆதவன் நகரைச் சேர்ந்த அசரத் அலி, அவரது மனைவி செல்வி (எ) லட்சுமி (39), அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), மதுரவாயலை சேர்ந்த சரத்குமார் (28) ஆகியோர் காரில் வந்து ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இந்நிலையில், காரில் ஆடுகளை திருடி கடத்தி சென்ற சரத்குமார், அஜித்குமார் மற்றும் செல்வி (எ) லட்சுமி ஆகிய 3 பேரையும் நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

The post மேய்ச்சலுக்கு வந்த போது தீனி கொடுத்து காரில் ஆடு திருடி சென்ற பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dheni ,Chengkundam, Cholavaram ,Dini ,Dinakaran ,
× RELATED தேனி மக்களவைத் தொகுதியில்...