×

மேகதாதுவில் கர்நாடகாவை அணைகட்ட விட மாட்டோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: கர்நாடகாவை மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.பி.ரஞ்சன் குமார், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், அடையாறு துரை, சங்கரபாண்டியன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே நீடிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. நெல்லை மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் திருநாவுக்கரசர் எம்பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: காமராஜர் பயன்படுத்தி, 50 ஆண்டு காலம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த காரை எந்த பொருளையும் மாற்றாமல் ஓடுகிற நிலைக்கு சீரமைத்துள்ளோம். இந்த கார் வருகிற 15ம் தேதி காமராஜர் வாழ்ந்த விருதுநகர் இல்லத்துக்கு கொண்டு வரப்படும். மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை காமராஜர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதற்கு பாராட்டி, நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் வழங்கியது. கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட ஆசைப்படலாம். ஆனால் அதை நடக்க விடமாட்டோம். தமிழக காங்கிரஸ் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பின்னால் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மேகதாதுவில் கர்நாடகாவை அணைகட்ட விட மாட்டோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Meghadatu ,KS Azhagiri ,Chennai ,Congress ,President ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரவில்லை: ஒன்றிய அரசு பதில்