×

வண்ணாரப்பேட்டையில் பாமக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மகனை கொல்ல வந்த கும்பலால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் வண்ணை சத்யா என்ற சத்திய நாராயணன். வடசென்னை மாவட்ட பாமக செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷால் (19). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று இரவு காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 6 பேர் கும்பல், நிஷாலை கத்தியால் வெட்ட முயன்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிஷால், பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தன்னுடைய தந்தைக்கு தகவல் கொடுத்துவிட்டு காசிமேடு காவல்நிலையத்தில் நிஷால் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நள்ளிரவு 11 மணி அளவில் நிஷால் வீட்டுக்கு வந்திருப்பான் என நினைத்து 6 பேர் கும்பல் தேடி பார்த்துள்ளது. அவர் காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றுவிட்டதால், ஆத்திரமடைந்த கும்பல், தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இதுபற்றி சத்யா, தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு நிஷாலை கொலை செய்ய வந்த கும்பலில் இருந்தவர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்ய வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரிக்கின்றனர்.

The post வண்ணாரப்பேட்டையில் பாமக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மகனை கொல்ல வந்த கும்பலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bamaga ,Vannarappeta ,Thandaiyarpet ,Sathya Narayanan ,Vannai Satya ,Cholaiyappan Street, Vannarpet, Chennai ,North Chennai ,BAMA ,Vannarappet ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்