சேந்தமங்கலம், ஜூலை 11: எருமப்பட்டி பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்து விட்டதால், ₹17.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இதில் ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம் பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்க வருகின்றனர். மேலும் சுற்றுவட்ட பகுதியான நவலடிப்பட்டி, வரகூர், செவிந்திப்பட்டி, வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது. வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக இறைச்சி ஆடுகள் ஏற்றுமதி குறைந்துள்ளது.
நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில், அனைத்து பகுதிகளிலும் திருவிழாக்கள் முடிந்ததால், சுமார் 300க்கும் குறைவான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த ஆடுகள் ₹16 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதேபோல, 200க்கும் மேற்பட்ட கோழிகள் ₹1.25 லட்சத்திற்கு விற்பனையானது. நேற்றைய சந்தையில் மொத்தம் ₹17.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
The post பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு appeared first on Dinakaran.