×

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பேச்சு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் மனு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பேச்சு மற்றும் தேசிய கொடி அவமதிப்பு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் தொடர்ந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜ பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யுடியூப்பில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியிருந்ததாக தெரிவித்தார். அப்போது நீதிபதி, தவறான மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பு கோரிவிட்டால், தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா என்று கேள்வி எழுப்பியதுடன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

The post பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பேச்சு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் மனு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : S.V. Shekhar ,Chennai ,SV Shekhar ,
× RELATED அண்ணாமலை தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ்.வி.சேகர்