×

மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஜிபி, ஐஜிக்களுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி, ஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார். அதைதொடர்ந்து அதே நாளில் புதிய டிஜிபியாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவியேற்றுக்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் ரவுடிகள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக காவல்துறையின் கடுமையான நடவடிக்கை தொடரும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள், பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவைத தடுத்தல், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் கண்காணிப்பு, கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்குள் போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தெற்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொள்கின்றனர்.

The post மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஜிபி, ஐஜிக்களுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,DGP ,IG ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,IGs ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...