×

வெளிநாட்டு மருமகளே, மணமகனே வா..வா..

மதுரை, பழங்காநத்தம் பகுதி திருச்செல்வன் – அனுசுயா தம்பதியின் மகள் நிவேதிகா. ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படித்து அங்கேயே இன்ஜினியராக வேலை செய்தார். அங்கு யோகா ஆசிரியரான எட்வர்ட் வீம் என்பவரை காதலித்தார். இருவரின் குடும்பத்தினரும் காதலை ஏற்கவே, இந்து பாரம்பரியப்படி டும்டும் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது. மதுரையை அடுத்த திருநகரில் ஒரு மண்டபத்தில், நேற்று இந்திய பாரம்பரிய முறைப்படி மணவிழா நடந்தது.

வெளிநாட்டு மணமகனின் பெற்றோர் மட்டுமின்றி, உறவினர்கள், நண்பர்களும் ஸ்வீடனில் இருந்து திரளாக வந்திருந்தனர். திருமண சடங்குகளை பார்த்து அவர்கள் ஆச்சர்யப்பட்டனர். புதுக்கோட்டை பூசத்துறையை சேர்ந்த பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியின் மகன் அருணகிரி (எ) அருண் பிரசாத் (24). எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அங்கு பணி நிமித்தமாக அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோஃப் ரில்ஸ்கி, மஷேனா போசனா தம்பதியின் மகள் ஹனியா (எ) அன்னாரில்ஸிகா அடிக்கடி வந்துள்ளார். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

போலந்து நாட்டு சட்டமுறைப்படி நிச்சயம் செய்து கொண்டனர். மணமகனின் பெற்றோர் சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமணம் செய்யலாம் என்றனர். இந்திய கலாசாரம், இந்து மதத்தில் ஆர்வம் கொண்ட ஹனியாவும் ஒப்புக்கொண்டார். அதன்படி புதுகை அருகே செல்லுக்குடியில் ஒரு மண்டபத்தில் நேற்று இந்து கலாசார முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது. அருணகிரி, ஹனியாவுக்கு தாலிகட்டினார். அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வாழ்த்தினர். ஒரேநாளில் வெளிநாட்டு மணமகன், வெளிநாட்டு மணமகளுக்கு நடந்த இந்த திருமணங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

The post வெளிநாட்டு மருமகளே, மணமகனே வா..வா.. appeared first on Dinakaran.

Tags : Nivethika ,Tiruchelvan ,Anusuya ,Palangantham ,Madurai ,Sweden ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில்...