×

செங்கல்பட்டில் பெண் டாக்டரை மிரட்டி 12 சவரன் சங்கிலி பறிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு வீட்டின் உள்புறமாக பூட்டியிருந்த முன்பக்க கதவை உடைத்து, அங்கு தூங்கி கொண்டிருந்த அரசு மருத்துவமனை பெண் டாக்டரை மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 12 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு, அண்ணாநகரை சேர்ந்தவர் மாலினி (43). இவரது கணவர் ஹரிகுமார் (47). இத்தம்பதி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து இத்தம்பதி வீடு திரும்பியுள்ளனர். பின்னர் இரவு உணவு சாப்பிட்டு, வீட்டு கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அறைக்குள் இருவரும் தூங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு வீட்டின் உள்பக்கமாக பூட்டியிருந்த முன்பக்க கதவை உடைத்து, டாக்டர் தம்பதியின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

வீட்டுக்குள் மர்ம நபர்களின் நடமாட்டத்தை அறிந்து டாக்டர் தம்பதிகள் அலறியடித்து எழுந்துள்ளனர். பின்னர் டாக்டர் மாலினிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், அவரது கழுத்தில் இருந்த 12 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர போலீசார் விரைந்து வந்தனர். அங்கு அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் டாக்டரை மிரட்டி தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post செங்கல்பட்டில் பெண் டாக்டரை மிரட்டி 12 சவரன் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,Chain Flush ,
× RELATED செங்கல்பட்டில் மதுபோதையில் முதியவரை தாக்கிய 4 பேர் கைது