×

மரத்தடியில் மீன்கள் விற்பனை மார்க்கெட் அமைத்து தர கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளில் போதிய மீன் மார்க்கெட் இல்லாததால் ரோட்டோரம், மரத்தடியில் மீன் விற்பனை நடைபெறுகிறது. இதனால் மீன் மார்க்கெட் அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஊரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் தங்களின் வீட்டுக்கு தேவையான மளிகை, காய்கறி, மீன் உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே வாங்க இங்கே தான் வர வேண்டும். மேலும் கடலோர கிராமங்களான மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதி கடலில் மீன்பிடிப்பார்கள்.

இந்த மீன்களை கம்பெனிகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்வார்கள். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி சார்பில் மீன் விற்பனை செய்ய போதிய மீன் மார்க்கெட் வசதி இல்லை. இதனால் இங்கு மீன்களை விற்பனை செய்ய வரும் மீனவர்களும், வியாபாரிகளும் ரோடு ஓரங்களிலும், மரத்தடிகளிலும், திறந்த வெளியில் வைத்து மீன் விற்பனை செய்கின்றனர். இதனால் அடிக்கும் வெயில் மற்றும் காற்றால் மீன்கள் விரைந்து கெட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வாங்கி சமைத்து சாப்பிடுபவர்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. விலை கொடுத்து வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள், வியாபாரிகளின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் போதிய மீன் மார்க்கெட்டை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மரத்தடியில் மீன்கள் விற்பனை மார்க்கெட் அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Rotoram ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு