×

கோவையில் துப்பாக்கியால் சுட்டு டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்தது ஏன்? பாதுகாவலர் திடுக்கிடும் வாக்குமூலம்

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது பற்றி அவரது பாதுகாவலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக டிஐஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், ரவிச்சந்திரன் அளித்த எழுத்து பூர்வமான வாக்குமூலம் விவரம்: நான் ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக (எண்.297) பணியாற்றினேன். கடந்த 2016 முதல் டிஐஜி அலுவலகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன். எனக்கு 99 எம்.எம் ரக பிஸ்டல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி டிஐஜி விஜயகுமார் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது, டிஐஜி அவரது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அவர் கோவை சரகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் வந்ததில் இருந்து சரியாக தூக்கம் வரவில்லை என மாத்திரை எடுத்துக் கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி இருந்தேன்.

டிஐஜி தினமும் காலை 7 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் வழக்கு விவரங்களை (டிஎஸ்ஆர்) பார்ப்பதற்காக கீழே உள்ள தனி அறைக்கு வருவார். ஆனால், நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கே வந்தார். முகாம் அலுவலகத்தில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சிக் கொடுத்தார். காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு டிஐஜி வந்து டிஎஸ்ஆர் எங்கே என கேட்டார். நான் அதை எடுத்து கொடுத்தேன். அதன்பின், நான் தங்கியிருந்த அறையில் எப்போதும் போல் துப்பாக்கி வைத்திருக்கும் இடத்திற்கு டிஐஜி சென்றார். என்னிடம் இதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரியுமா?, இதில் புல்லட் ேலாட் செய்து விட்டாயா? என கேட்டு கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நான் டி-சர்ட்டை அணிந்து வெளியே வருவதற்குள் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. நானும், முகாம் அலுவலகத்தில் அறையில் இருந்த டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம். அப்போது, டிஐஜி மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார்.

துப்பாக்கி அங்கேயே கிடந்தது. அவரது மனைவிக்கு தகவல் சொல்வதற்காக அன்பழகனும், நானும் சத்தம் போட்டுக்கொண்டே மேலே ஓடினோம். உடனே அறையிலிருந்து வெளியே வந்த அவரது மனைவி என்ன ஆச்சு என கேட்டார். நடந்த விவரத்தை சொன்னதும் அவர் ஓடி வந்து பார்த்தார். பதறியபடி அவரும், நாங்கள் இருவரும் ஜீப் மூலமாக டிஐஜியை கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் கொண்டு வந்து சேர்த்தோம். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு டிஐஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயர் அதிகாரிக்களுக்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தேன். மேலும், என்ன காரணத்திற்காக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு கொண்டார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார். எப்ஐஆர் அசல் மற்றும் புகார் மனு இணைத்து கோவை குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

* புகார்களை எளிதாக தீர்த்து வைப்பார்
தூக்கமின்மை, நெருக்கடி, மன அழுத்த பாதிப்பு இருந்த போதிலும் சரக அளவில் டிஐஜி விஜயகுமார் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். வழக்கு விவகாரம், நிலுவை வழக்குகள், கஞ்சா கடத்தல், போக்சோ வழக்குகளில் இவர் தீவிர கவனம் செலுத்தி வந்தார். போலீசார், அதிகாரிகள் மீதான புகார்களை இவர் சரியாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வந்தார். முகாம் அலுவலகத்திற்கு புகார் தர வந்தால் அது தொடர்பாக விசாரித்து எளிதில் தீர்த்து வைப்பார்.

* தற்கொலை செய்ய முன்கூட்டியே திட்டம்?
டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததை அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரையும், அவரது மனைவியையும் ஐஜி அலுவலகத்தில் அழைத்து 2 மணி நேரம் பேசியுள்ளார். அப்போது மன அழுத்தத்திலிருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்து கவுன்சலிங் கொடுத்துள்ளார். இதேபோல், கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணனும் டிஐஜியிடம் பேசியதாக தெரிகிறது. விஜயகுமார் கடந்த 10 ஆண்டுகளாக ஓசிடி வகையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, இணையதளத்தில் நிறைய குறிப்புகள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்து இருக்கிறார். இவருடைய மகளை மருத்துவம் படிக்க தயார் செய்துவிட்டதாகவும் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

2 நாளுக்கு, முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, நண்பரான அரசு அதிகாரி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவரும், டிஐஜியும் ஆனைகட்டிக்கு செல்ல திட்டமிட்டதாக தெரிகிறது. அந்த நண்பர் வராததால் டிஐஜி அங்கு போகவில்லை. தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவே அதாவது போலீஸ் அதிகாரியின் மகன் பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது பாதுகாவலரிடம் துப்பாக்கி எல்லாம் எங்கே வைப்பீங்க, பத்திரமாக இருக்கிறதா?, புல்லட் போட்டு இருக்கிறதா? என கேட்டுள்ளார். பின்னர், துப்பாக்கி இருக்கும் இடத்தையும் அவர் சென்று பார்த்துள்ளார். பின்னர், மறுநாள் காலையில் அங்கு சென்று துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன் கூட்டியே திட்டமிட்டு தற்கொலை செய்ததாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

The post கோவையில் துப்பாக்கியால் சுட்டு டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்தது ஏன்? பாதுகாவலர் திடுக்கிடும் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : DIG Vijayakumar ,Govai ,Godhi Saraka ,DIG ,Vijayakumar ,Cova ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!