- ஜககம்
- முதல் அமைச்சர்
- விவசாய வணிகம்
- திருவிழா
- கெ ஸ்டாலின்
- சென்னை
- அரசினர். சாகச
- முதலமைச்சர் விவசாய அலுவல்கள்
- கி.மு.
சென்னை: ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான இலவச மின் இணைப்புகளை உழவர்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளோம். திமுக அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் நடைபெற்று வரும் வேளாண் வணிக திருவிழா 2023-ல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் திறந்து வைத்தார். விழாவில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் – உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறை. ஆட்சியாளர்களாகிய நாங்கள் பெயர்பெற வேண்டுமென்று சொன்னால், உழவர்கள் உரிய மரியாதையையும், சிறப்பையும், வளத்தையும் பெற்றாக வேண்டும்.
திமுக அரசு அமைந்ததும், வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் வேளாண்மைக்கென என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காரணம், வேளாண்மையை முதன்மையான துறையாக நாங்கள் நினைக்கின்ற காரணத்தால்தான், இத்தகைய வளர்ச்சியை எட்ட முடிந்தது. கடந்த இரண்டாண்டு காலத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை, உணவு தானிய உற்பத்தியில் மகத்தான சாதனை செய்துள்ளது. 120 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம். சுமார் 79 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியும், 36 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தியும், 5 லட்சம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. இவை முந்தைய ஆண்டை விட 4 சதவீதம் அதிகம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய ஜூன் 12ம் நாளே அல்லது அதற்கு முன்பாகவோ மேட்டூர் அணையை திறந்து விட்டிருக்கிறோம். இது ஒரு மிகப் பெரிய சாதனை. காவிரி டெல்டா உழவர்களுக்காக 61 கோடி ரூபாய்க்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தை வழங்கினோம். அரிசி மட்டுமல்லாமல், சிறுதானிய உற்பத்தியிலும், பயறு உற்பத்தியிலும் சாதனை படைத்திருக்கிறோம். பருத்தி, தென்னை என அனைத்திலும் கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மகுடம் வைக்கக்கூடிய விழாவாக வேளாண் வணிக திருவிழா இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேளாண்மை என்பது வாழ்க்கையாக, பண்பாடாக இருந்தாலும், அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை. அப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைப்பதால்தான் வேளாண் வணிக திருவிழாவை நடத்துகிறது. வெறும் “அக்ரி எக்ஸ்போ”-ஆக இல்லாமல், இது “அக்ரி பிசினஸ் எக்ஸ்போ”-ஆக நடத்தப்படுகிறது. உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலமெல்லாம் இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன்தான் உழவர் சந்தைகளை தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைத்துக் கொடுத்தார். அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அதனை முறையாக செயல்படுத்தி இருந்தால் உழவர்களுடைய வாழ்வில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
திமுக அரசு அமைந்ததும், சுமார் 100 உழவர் சந்தைகளை மீண்டும் புத்தொளி பெற வைத்தோம். புதிதாக 10 உழவர் சந்தைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு மூலதன உதவியும், கடன் உத்தரவாதமும் தரப்பட்டுள்ளது. 140 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 12 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி உதவி தரப்பட்டுள்ளது. இவர்களது உற்பத்தி பொருட்கள் மாநகராட்சி அங்காடிகளில், விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில், உழவர்களுக்காக செய்யப்பட்ட மாபெரும் முன்னெடுப்பு இது. வேளாண் ஏற்றுமதிகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே, மின்னணு மயமாக்கலும் நடந்து வருகிறது. இவை அனைத்தும் உழவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மாபெரும் தொழில் நிறுவனங்கள் கண்காட்சிகள் நடத்தும் இடத்தில் வேளாண் கண்காட்சி நடத்தப்படுவது உள்ளபடி சிறப்பானது. இது ஒரு மிகப்பெரிய சாதனை.
பாசன பரப்பு அதிகமாக வேண்டும். அதன் மூலமாக உற்பத்தி பெருக வேண்டும். உற்பத்தியான பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். உரிய விலையின் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
தரமான வேளாண் பொருட்கள் மக்களுக்கு உரிய விலையில் கிடைக்க வேண்டும். ஏற்றுமதி பெருக வேண்டும். இத்தகைய வேளாண் புரட்சியை நாம் நடத்தி வருகிறோம். அதற்காக எத்தனையோ திட்டங்களை நாம் தீட்டி தந்திருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வேளாண்மையில், நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்னை இல்லை. வேளாண் பணியாளர்கள் கிடைக்கிறார்கள். இவை அனைத்தையும் உழவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றம் மற்றும் உணவு தேவை அதிகரிப்பு ஆகிய இரண்டையும் சமாளிக்கும் வகையில் நம்முடைய வேளாண் முயற்சிகள் அமைய வேண்டும். துல்லியமான வேளாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஸ்மார்ட் போனை பயன்படுத்தி பயிர் பாசன முறையை கண்காணித்தல், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துதல் ஆகியவை எல்லாம் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது, உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால், வேளாண்மை என்பது வர்த்தக தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இதுபோன்ற கண்காட்சிகளை தொடர்ந்து நடத்துங்கள். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற கண்காட்சிகளால் விளை பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படி, வேளாண் பெருங்குடி மக்களின் நலன் போற்றும் அரசாக நம்முடைய அரசு இருந்து வருகிறது.
ஆனால் உழவர்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து பல நூறு பேர் உயிரிழந்த பின்னர்தான் பாஜ அரசு பின் வாங்கியது. இதுதான் உழவர் விரோத ஒன்றிய பாஜ அரசு. ஆனால், திமுக அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும். அதன் அடிப்படையில், இந்த மண்ணையும், மக்களையும் காப்பதற்கான கடமை அவர்களுக்கு காத்திருக்கிறது. அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் அறிவு என்பது உழவர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். மண்ணை காப்போம்.
மக்களை காப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், எஸ்.ரகுபதி, எம்எல்ஏ சுதர்சனம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், உழவர்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* விவசாயிகளை விற்பனையாளராக உயர்த்த வேண்டும்.
* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம்.
* வேளாண் அறிவு என்பது உழவர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். மண்ணை காப்போம். மக்களை காப்போம்.
The post 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கி சாதனை திமுக அரசு உழவர்களின் நண்பனாக இருக்கிறது: வேளாண் வணிக திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.