×

ஆறுமுகநேரியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கிய கும்பல் கைது

*அரிவாள், இரும்பு ராடு, கத்தி, பைக் பறிமுதல்

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி எஸ்ஐ வேல்பாண்டியன் தலைமையில் எஸ்எஸ்ஐ பாபுராஜ் மற்றும் போலீசார், காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பேயன்விளை தர்மகுட்டி சாஸ்தா கோயில் செல்லும் வழியில் சென்றபோது, எஸ்ஆர்எஸ் கார்டன் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவரின் அருகே பைக்கில் நின்றிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். போலீசார், கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டார். 4 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் அரிவாள், கத்தி, இரும்பு ராடு போன்ற பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி 3வது மைல் திரு.வி.க.நகரைச் சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன்(27), ஆறுமுகநேரி கமலாநேரு காலனி கோபால் மகன் சஞ்சய்குமார்(21), ஆறுமுகநேரி கீழசண்முகபுரம் கந்தசாமி மகன் பெருமாள்(23), ஸ்பிக்நகர் 3வது தெரு பாரதிநகர், பாலசுப்பிரமணியன் மகன் சங்கர்கணேஷ்(25) என்பதும், தப்பியோடியவர், புதுக்கோட்டை பிரகாஷ்நகர் தங்கமாரி மகன் சுடலைமுத்து(23) என்பதும் தெரியவந்தது. ஆறுமுகநேரியில் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவான எஸ்.ஆர்.எஸ். கார்டனில் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்திருக்கும், பூட்டி இருக்கும் வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக ஆயுதங்களுடன் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த அரிவாள், கத்தி, இரும்பு ராடு மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சுடலைமுத்துவை தேடி வருகின்றனர். இதுகுறித்து ஆறுமுகநேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, விசாரணை நடத்தி வருகிறார். கைதானவர்கள் மீது ஏற்கனவே திருச்செந்தூர், தூத்துக்குடி, சிப்காட், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆறுமுகநேரியில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கிய கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Arumukaneri ,SI ,Velpandian ,SSI Baburaj ,
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...