×

ரவுடி கொலை வழக்கு கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க வற்புறுத்தியதால் கொன்றேன்: கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

திருப்போரூர்: கொலை, கொள்ளையடிக்க கூட்டு சேர வற்புறுத்தியதால், சேலையூர் ரவுடியை கொலை செய்தேன் என கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கேளம்பாக்கம் அருகே பொன்மார் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தாழம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, கழுத்து மற்றும் வயிறு ஆகிய இடங்களில் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் மதுரப்பாக்கம், மந்தைவெளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவியின் மகன் லோகநாதன் (எ) பிரவீன் (20) எனவும், இவர் மீது சேலையூர் காவல் நிலையத்தில் பெண் கொலை வழக்கு, பல்வேறு அடிதடி, தகராறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இறந்த பிரவீனின் செல்போன் பேச்சுகளை ஆய்வு செய்தபோது, பொன்மார் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ஈஸ்வரன் (21) என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, ஈஸ்வரன் வெளியூர் சென்றிருப்பதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், ஈஸ்வரன் செல்போன் சிக்னலை வைத்து, ஈஸ்வரன் திருவொற்றியூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திருவொற்றியூருக்கு சென்று, அங்கு வீட்டில் பதுங்கியிருந்த ஈஸ்வரனை கைது செய்தனர். பின்னர், அவனிடம் நடத்திய விசாரணையில், பிரவீனும், ஈஸ்வரனும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சேலையூர் பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பிரவீன், என்னுடன் கூட்டாளியாக சேர்ந்தால் அடிக்கடி கொலை, கொள்ளை செய்யலாம். அப்போதுதான் நீயும் ரவுடியாகலாம் என அடிக்கடி ஈஸ்வரனிடம் கூறி, தன்னுடன் கூட்டாளியாக வந்துவிடும்படி பிரவீன் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இரவு, இருவரும் ஒன்றாக மது குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஈஸ்வரனிடம், தன்னுடன் கூட்டாளியாக வரும்படி பிரவீன் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், பீர் பாட்டிலை உடைத்து பிரவீனின் தலையில் சரமாரி அடித்தும், கழுத்தில் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியதும், போலீசாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஈஸ்வரனிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரவுடி கொலை வழக்கு கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க வற்புறுத்தியதால் கொன்றேன்: கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Roudy ,Tirupporur ,Salaiyur Roudi ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...