×

மேட்டுப்பாளையத்தில் டியூசன் சென்ற 8ம் வகுப்பு மாணவி மாயம்

*ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என போலீஸ் விசாரணை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியின் 13 வயது மகள் ஆலாங்கொம்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் மாலை டியூஷன் செல்வதாக கூறி விட்டு சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காட்டூர் பகுதியில் மாணவி ஓட்டிச்சென்ற சைக்கிளும், நெல்லித்துறை சாலை ரயில்வே கேட் அருகே உள்ள பவானியாற்று ரயில்வே பாலத்தின் மேல் மாணவி அணிந்திருந்த துப்பட்டா மற்றும் காலணிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீசார், மாணவி காட்டூர் ரயில்வே கேட் வழியாக டியூசன் செல்லும் பொழுது ஆற்றினை பார்க்க சென்றிருக்கலாம். அப்போது, தவறி ஆற்றில் விழுந்திருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இதனால், மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பரிசல் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற்ற லைப் கார்ட்ஸ் குருவினருடன் இணைந்து மாயமான மாணவியை பவானியாற்றில் காட்டூர் ரயில்வே கேட் முதல் கரட்டுமேடு வரை தேடி வருகின்றனர்.

மாலை வரை தேடியும் மாணவி கிடைக்கவில்லை. பின்னர், நேற்று மாலை இருள் சூழ்ந்ததால் மாயமான மாணவியை தேடும் பணியினை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் நிறுத்தினர்.இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடரும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 8ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி மாயமான சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மேட்டுப்பாளையத்தில் டியூசன் சென்ற 8ம் வகுப்பு மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Tucson ,Mettupalayam ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்