×

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அமெரிக்கா: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். முதல்வர் தலைமையில் மைக்ரோசாஃப்ட் இயக்குநர்களுடன் TEALS திட்ட தொடக்க விழா நடக்க உள்ளது. Technical Education and Learning Suppoort எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஒப்பந்தமானது. முதல்கட்டமாக 13பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தரமான கல்வி வழங்குவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.TEALS (Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும். வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. TEALS என்னும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டுமென இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் போட்டியிட்டது.

ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் தந்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் தமிழ்நாடு மாநிலம் முதன் முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில், இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமையாகும்.முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 ஆயிரத்து 800 மாணவர்கள் பயன் பெறும் வகையில் TEALS திட்டம் விரைவில் தொடங்கி செயல்படுத்தப்பட உள்ளது.

மிக விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் பங்கு பெறும் TEALS திட்டத் தொடக்க விழா தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

The post மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Microsoft ,Minister ,Anil Makesh ,USA ,Magesh ,Loving Makesh ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்...