×

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பாகும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,”எனத் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தைப் பின்னணியாக கொண்ட இவர் 2009 ல் ஐ.பி.எஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் ஆவார். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் கோவை டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்றார்.பல்வேறு வழக்குகளை திறமையாகக் கையாண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் டிஐஜி விஜயகுமார் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பாகும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Govai Saraka ,Vijayakumar ,Tamil Nadu's Department ,CM G.K. ,stalin ,Chennai ,Govai Sarraka ,Tamil ,Nadu ,Department ,CM. ,G.K. Stalin ,Gov. ,Sarraka ,Chief President B.C. G.K. ,
× RELATED கார் விபத்தால் தகராறு: போலீசார் வழக்கு