* பல்வேறு நாட்டினர் பங்கேற்பு
சென்னை: மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் சர்வதேச காற்றாடி திருவிழா 2வது முறையாக நடைபெற உள்ளது. இதில், பல்வேறு நாட்டினர் பங்கேற்க உள்ளனர். மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச காற்றாடி திருவிழா, கடந்தாண்டு நடத்தப்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காத்தாடி விடும் வீரர்கள் கலந்து கொண்டு, பல்வேறு வடிவங்களில், வண்ண மயமான காத்தாடிகளை பறக்க விட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அதேபோல், இந்தாண்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்து இரண்டாவது முறையாக, சர்வதேச காற்றாடி திருவிழா நடந்த உள்ளது. இந்த திருவிழா, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்க உள்ளது. இதில், இந்தியா, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர், வீராங்கனைகள் 100க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து காற்றாடிகளை பறக்க விட உள்ளனர்.
இந்நிகழ்ச்சி, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையொட்டி உள்ள 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான டிடிடிசி ஓஷன் வியூவில் நடக்க இருக்கிறது. இந்த, காற்றாடி திருவிழாவை கண்டு ரசிக்க குழந்தைகளுக்கு இலவச அனுமதியும், பெரியர்களுக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.
The post மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் சர்வதேச காற்றாடி திருவிழா: 2வது முறையாக நடைபெறுகிறது appeared first on Dinakaran.