×

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது உ.செல்லூர் கிராமம். இந்த கிராமத்திலிருந்து தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக உ.செல்லூர் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் அரசு கிராமப்புற பேருந்து இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் ஆதனூர் கிராமத்தில் இருந்து வரும் மற்றொரு பேருந்தில் உளுந்தூர்பேட்டைக்கு சென்று வந்தனர். இந்த பேருந்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என மாணவர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆதனூர் கிராமத்தில் இருந்து வந்த அரசு கிராமப்புற பேருந்தை உ.செல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிறைபிடித்து பேருந்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் உ.செல்லூர் கிராமத்திற்கு தனியாக பேருந்து இயக்க வேண்டும் என கூறி அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துசென்றனர். உடனடியாக உ.செல்லூர் கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்தை இயக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளதால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Uilandurbat ,Ilundurbate ,Kallakkurichi District ,Uilandurbate ,Sellore Village ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...