×

செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை: வருமானவரித்துறை

சென்னை: செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 583 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் முறையாக நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கணக்கு காட்டாத சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையை தொடங்கி உள்ளனர்.

பொதுவாக சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை கொண்ட பத்திரப்பதிவுகளை முறையாக கணக்கு காட்டப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில், பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமலேயே பத்திரப்பதிவுகள் நிகழ்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் பெருந்தொகை பணப்பரிவர்த்தனையில், நில பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும், அது குறித்து நிதி பரிவர்த்தனை அறிக்கையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முதற்கட்டமாக வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஒவ்வொரு அலுவலகத்திலும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகையும், பதிவு செய்யப்பட்ட தொகையும் சரியாக உள்ளதா என வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டனர். இதில்; செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வில் ரூ.2,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டப்படவில்லை. திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ரூ.1,000 கோடி பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை. 2 அலுவலகங்களிலும் பதிவுகளை ஆராய்ந்து கணக்கிடும் பணி நடைபெறுவதால் தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

The post செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.3,000 கோடி மதிப்பு பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டவில்லை: வருமானவரித்துறை appeared first on Dinakaran.

Tags : Registrar Registrar ,Chengkunnam ,Bandaiyur ,Department of Revenue ,Chennai ,Revenue Department ,Registrar of Chengkunnam ,Bhagaiyur ,Registrar of Chengunnam, Uphayur ,
× RELATED செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை..!!