×

இசிஆர் சாலையில் விபத்தை தடுக்க சாலையோரம் தடுப்புவேலி அமைக்க கோரிக்கை

 

தொண்டி, ஜூலை 5: தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள குளத்தில் தடுப்பு வேலி இல்லாததால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை- ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரம் நம்புதாளை குளத்தில் தற்போது ஒரளவு தண்ணீர் உள்ளது. ரோடும் குளமும் ஒன்றாக உள்ளது போல் தெரிகிறது.

இந்த குளத்தில் தடுப்பு வேலி கிடையாது. வளைவான இடத்தில் குளம் உள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் குளம் இருப்பது தெரியாமல் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது.ஏற்கனவே பலமுறை வாகனங்கள் குளத்தின் உள்ளே சென்று விபத்து ஏற்பட்டது. அதனால் விபத்தை தடுக்கும் விதமாக குளத்தின் கரையில் தடுப்பு வேலி அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பல பகுதியில் தற்போது தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜ் கூறியது, வளைவான பகுதியில் குளம் உள்ளதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே சென்று விடுகிறது. கடந்த வருடம் ஒரு டூரிஸ்ட் வேன் மற்றும் டாக்டர் ஒருவரின் கார் உள்ளே சென்று தண்ணீரில் மிதந்து விபத்து ஏற்பட்டது. இந்த குளத்தின் கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அல்லது வேலி அமைத்தால் விபத்தினை தடுக்கலாம். திருவாடானைக்கும் தொண்டிக்கும் இடையில் கடந்த மாதம் பல இடங்களில் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதேபோல் இங்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post இசிஆர் சாலையில் விபத்தை தடுக்க சாலையோரம் தடுப்புவேலி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து