×

நீதிபதி உத்தரவை பின்பற்றாததால் பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

மதுரை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஜாமீன் நிபந்தனையை மாற்றக் கோரி பாஜ செயலாளர் எஸ்.ஜி.சூரயாவின் மனுவை மதுரை ஜேஎம் 1 நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா டிவிட்டரில் அவதூறாக பதிவிட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிந்த மதுரை சைபர் கிரைம் போலீசார், எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கிய மதுரை ஜேஎம் 1 நீதிமன்றம், 30 நாட்களுக்கு மதுரை சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது. இந்நிலையில் தனக்குரிய நிபந்தனையை மாற்றம் செய்து சென்னையில் கையெழுத்திட அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி எஸ்.ஜி.சூர்யா, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், வயதான தனது பெற்ேறாரை உடன் இருந்து கவனிக்க வேண்டியுள்ளது என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி, ‘மனுதாரர் இதுவரை 10 நாட்கள் மட்டும் தான் கையெழுத்திட்டுள்ளார். அதுவும் நீதிமன்றம் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. அவருக்கு வசதியான நேரத்தில் தான் வந்துள்ளார். நீதிமன்றத்தின் நிபந்தனைகளை பின்பற்றவில்லை. அவரது லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகவல்கள் பெறவேண்டியுள்ளது. இந்த நேரத்தில் நிபந்தனையை மாற்றினால் விசாரணை பாதிக்கும். எனவே, நிபந்தனையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது’ என வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தனக்குரிய நிபந்தனையை சென்னைக்கு மாற்றக் கோரும் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post நீதிபதி உத்தரவை பின்பற்றாததால் பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : BJP ,SG Surya ,Madurai ,
× RELATED காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை