×

சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிலை கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிதான அரிகண்ட சிற்ப சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, நிர்வாகிகள் நரசிம்மன், முத்துக்குமார் ஆகியோர் சோழபுரம் பகுதியில் கள ஆய்வு செய்தனர். இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பத்தை கண்டுபிடித்தனர். இது குறித்து காளிராசா தெரிவித்ததாவது: சோழபுரத்தில் இருந்து நாலு கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோவிலில் இச்சிற்பம் அடையாளம் காணப்பட்டது. தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ நோயிலிருந்து மீளவோ காளி தேவியிடம் வேண்டிக்கொண்டு போரில் வெற்றி பெற்ற பிறகு அல்லது உடல் நலம் பெற்ற பிறகு தன் தலையை தானே அரிந்து உயிர் விடுதலே அரிகண்டமாகும். நவகண்டம் என்பது ஒன்பது இடங்களில் வெட்டி, உடம்பை ஒன்பது கண்டங்களாக்கி உயிரை துறப்பது என்பர். அரிகண்டம், நவகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் கலிங்கத்துப் பரணியில் இடம் பெற்றுள்ளன.

அவி பலி, தலைப் பலி, தன் பலி, அரிகண்டம் என அழைக்கப்படுவதுண்டு. அரிகண்டமாக தன் தலையை வெட்டி உயிர் கொடுத்தவருக்கு உதிரக் காணி வழங்கப்படுவதும் உண்டு, காளையார்கோவில் ஒன்றியம் மல்லலில் இவ்வாறான சோழர் காலக் கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட 2அடி உயர சிலை ஒரு காலை முன் வைத்து மற்றொரு காலை பின் வைத்து மடக்கி அமர்ந்த நிலையில் இடது கையில் தன் தலைக் குடும்பியை பிடித்துக் கொண்டும் வலது கையில் வாளால் தன் தலையை அரிவதுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதில் காதணிகளும், முன் கையில் வளையல்களும், பின் கையில் தோடாவும், கழுத்தில் பதக்கம் போன்ற ஆபரணமும் இடையில் ஆடையும் அணிந்து வளமுடையவராக காட்டப்பட்டுள்ளதால் இவர் படைத்தலைவனாக இருந்திருக்கலாம்.

இச்சிற்ப அமைப்பைக் கொண்டு இது பதினோராம் நூற்றாண்டு சிற்பமாகக் கருதலாம். இச்சிலைக்கு அருகிலேயே மூன்று வீரர்கள் வரிசையாக நிற்கும் நடுகல் சிற்ப சிலை ஒன்று உள்ளது. பிடாரி என்பது ஊர் வழக்கு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது, காளியே பிடாரியாக வழங்கப்படுவதாக தொல்லாய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிலின் பின் பகுதியில் பழமையான சிலைகளை வைத்துள்ளனர். அதில் ஒரு சிலை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்கலாம். இச்சிலை அமர்ந்த நிலையில் எட்டுக்கரங்களுடன் காளியாக காட்சி தருகிறது. இச்சிலை முன்பாகவே தலைப்பலி நிகழ்ந்திருக்கலாம். இக்கோவிலில் அரிகண்டம் மற்றும் நடுகல் வீரர்கள் சிற்பங்கள் சேர்த்து சப்த கன்னிமாராக வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

The post சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிலை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariganta ,Sivaganga ,Sivagangai ,Cholhapura ,Sivagangai Leisure Group ,Sivakanga ,
× RELATED சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு...