×

ராஜபாளையத்தில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு மாயூரநாதர் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலம்: இன்று தேரோட்டம் நடைபெறுகிறது

ராஜபாளையம், ஜூலை 2: ராஜபாளையத்தில் புகழ்பெற்ற அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆனி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பெத்தவநல்லூர் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் ஆனி மாதம், தேரோட்டத்துடன் கூடிய 10 நாள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆனி பெருந்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்திற்கு முன்பாக சுவாமி அம்பாள் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிவ மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. பூர்ணாஹூதிக்கு பின் சுவாமி சன்னதிக்கு முன்புறம் உள்ள கொடிமரத்தில் சிவ கோஷம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தினமும் சுவாமி மற்றும் அம்பாள், உற்சவர் சிலைகள் பூப்சப்பரம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், கற்பக வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், யானை வாகனம், அன்ன வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று முன் தினம் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.

The post ராஜபாளையத்தில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு மாயூரநாதர் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலம்: இன்று தேரோட்டம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Mayuranathar Swami ,Thirukalyanam Kolagalam ,Rajapalayam ,Mayuranath ,Swami Thirukalyanam Kolagalam ,Udanurai Arulmiku ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்