×

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்..!

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதியில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் 87 மாவட்ட செயலாளர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 7 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். எழும்பூரில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்; செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துவிட்டார், அதுபற்றி கேட்க வேண்டாம். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. கூட்டணி தொடர்பாக எங்களுடன் நேரடியாக பாஜகவினர் பேசி வருகிறார்கள். வேண்டுமென்றால் நம்முடன் பாஜக வரட்டும்; அவர்கள் தயவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை; பகைத்துக் கொள்ளவும் வேண்டாம். நமக்கு தொண்டர்கள் பலம் உள்ளது; தினகரன் நமக்கு துணையாக தோழமையாக செயல்பட உள்ளார். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; விரைவில் அழைப்பு வரும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ்; எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை, அவர்கள் நமக்கு கற்பித்துவிட்டனர். பழனிசாமி அரசு கவிழக்கூடிய சூழல் இருந்தது; நாம் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அன்றே கவிழ்ந்திருக்கும். ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதாலேயே ஆதரவு அளித்தோம். பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நான்கரை வருடத்தில் எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்துவிட்டனர்.

கட்சி தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொண்டர்களுக்கு எம்ஜிஆர் வழங்கிய அடிப்படை உரிமையை பறித்துவிட்டனர். எம்ஜிஆர் நமக்கு அளித்த உரிமையை பறிக்க இந்த பழனிசாமி யார்? கொங்கு மண்டலா மாநாடு உறுதியாக நடைபெறும்; விரைவில் தேதி அறிவிக்கப்படும் இவ்வாறு கூறினார்.

The post எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Pannerselvam ,Chennai ,Edabadi Palanisamy Bannerselvam ,Chennai, Elampur ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு