×

வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு சிபிசிஐடி சம்மன்: புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு சிபிசிஐடியின் சம்மன் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 180க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிவு தடயவியல் ஆய்வகத்தில் இருந்து வரவேண்டியுள்ளது. இந்நிலையில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த மேலும் 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால் அந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்தனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனையை எதிர்த்து ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் ஒரு மனுவை கடந்த 27ம் தேதி தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும் 8 பேரும் ஆஜராகினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசாரால் அளிக்கப்பட்ட சம்மனை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் 8 பேரிடம் வழங்கியது. ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நாளை பிற்பகல் 2 மணிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தினார். டி.என்.ஏ பரிசோதனை எப்போது நடைபெறும் என்ற முடிவு நாளை அறிவிக்கப்படும் என்றும் புதுக்கோட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு சிபிசிஐடி சம்மன்: புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vengaivail ,D. N.N. ,CBCIT ,SAMMAN ,Pudukkotai Special Court ,Pudukkotta ,N.N. ,CPCID ,Vengaivayil ,Pudukkoda ,Bengal D. N.N. ,CBCID ,Pudukkotta Special Court ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...