சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே விபத்தில் தாய், தந்தை மற்றும் அக்கா என மூவரையும் பறிகொடுத்த மாணவியை கல்லூரியில் சேர்த்து சன் செய்தி எதிரொலியாக திமுக நிர்வாகிகள் உதவி கரம் நீட்டியுள்ளனர். இளம்பிள்ளை அருகே கல்பாறைப்பட்டியை சேர்த்த விசைத்தறி தொழிலாளி வெங்கடாச்சலம், மாரியம்மாள் தம்பதியின் இளைய மகள் அமுதா 12-ம் வகுப்பு பொது தேர்வில் 574 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
அமுதாவை அவரது தந்தை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் சேர்க்க ரூ.2,500 கட்டி மேற்படிப்புக்காக விண்ணப்பித்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தந்தை வெங்கடாச்சலம், தாய் மாரியம்மாள், சகோதரி அமுதா ஆகிய 3 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்தனர். இதனால் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அமுதா தனது கல்லூரி படிப்புக்கு உதவ வேண்டும் என்று அரசுக்கும், தன்னார்வலர் நிறுவனங்களுக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
அமுதாவின் பரிதாப நிலை குறித்து சன் செய்திகளில் வெளியானதை அடுத்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளரான மருத்துவர் தருண் மற்றும் திமுகவை சேர்ந்த சிலர் மாணவி அமுதாவை தனியார் கல்லூரிக்கு அழைத்து சென்று அவர் விரும்பிய பி.காம் படிப்பில் சேர்த்து விட்டனர். இதேபோன்று மாணவியை பலரும் தொடர்பு கொண்டு உதவிகளை கேட்டு அறிந்து வருகின்றன. மாணவி வசிக்கும் குடிசை வீடு பழுதடைந்து காணப்படும் நிலையில் அரசின் சார்பில் கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என்று மாணவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
The post சேலம் அருகே விபத்தில் தாய், தந்தை மற்றும் அக்கா என மூவரையும் பறிகொடுத்த மாணவியை கல்லூரியில் சேர்த்து திமுக நிர்வாகிகள் நிதியுதவி..!! appeared first on Dinakaran.