×

பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை அமோகம் பக்ரீத் பண்டிகை எதிரொலி

வேலூர், ஜூன் 28: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ேநற்று அதிகளவில் கால்நடைகள் குவிந்த நிலையில் ₹80 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்த நிலையில் கோடை காலம் முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தீவனப்பற்றாக்குறை பிரச்னை இருக்காது என்பதால் வழக்கத்தை விட விற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகள் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் குர்பானிக்காக மாடுகள் பலியிடப்படும். இதனால் ேநற்று பொய்கை மாட்டுச்சந்தையில் வழக்கத்தை விட அதிகமாக மாடுகள், ஆடுகள் என குவிந்தன. இவ்வாறு நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வர்த்தகம் ₹80 லட்சத்துக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை அமோகம் பக்ரீத் பண்டிகை எதிரொலி appeared first on Dinakaran.

Tags : Poikai Cattle market ,Bakrit festival ,Vellore ,Bakrit ,Poikai ,Cattle Market ,
× RELATED வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்