×

எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கினார்? மோடியை குறை கூறும் முன் ஒபாமா சிந்திக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் கருத்து

ஜம்மு: இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து பேசும் முன்பு ஒபாமா ஆட்சிக் காலத்தில் எத்தனை முஸ்லிம் நாடுகள் தாக்கப்பட்டன என்பதை முதலில் சிந்திக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் பேசினார். பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில், ‘சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் நாடு பிளவுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மோடியிடம் ேபசுவதற்கு வாய்ப்பு கிடைத்து இருந்தால் நான் இதுபற்றி பேசியிருப்பேன்’ என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்முவில் நேற்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் கூறுகையில்,’ இந்திய மக்கள் ‘வசுதைவ குடும்பம்’ என்ற கருத்தை நம்புகிறார்கள் என்பதையும், அனைத்து மக்களையும் ஒரே உலகளாவிய குடும்பத்தின் உறுப்பினர்களாக கருதுவதை ஒபாமா அறிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபராக இருந்த போது ஒபாமா எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கியுள்ளார் என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வதால் இந்தியா மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளில் கூட சமூகத்தின் 72 பிரிவுகள் இருக்காது என்பதை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் மட்டுமே நீங்கள் இத்தனை பிரிவினரை பார்க்கலாம். மோடியைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் உள்ள சில சக்திகளே காரணம். ஆனால் இந்தியா எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கியுள்ளது என்பதை மக்கள் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* காஷ்மீரில் விரைவில் தேர்தல்

காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறினார். அவர் கூறும்போது,’ ஜனநாயக தேர்தல் நடைமுறைகள் விரைவில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்படும். 370வது பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டது. இப்போது மக்களின் எதிர்காலம் குறித்தும், சட்டப்பேரவையை மீண்டும் கொண்டுவருவது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும். இதற்கான கால நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் நீண்டகாலமாக இப்படியே இருக்காது என்பதை நான் உங்களுக்கு நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும்’ என்றார்.

The post எத்தனை முஸ்லிம் நாடுகளை தாக்கினார்? மோடியை குறை கூறும் முன் ஒபாமா சிந்திக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் கருத்து appeared first on Dinakaran.

Tags : Obama ,Modi ,Rajnath Singh Jammu ,Obama administration ,India ,Rajnath Singh ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...