×

போதையில் தோழியுடன் தங்கியிருந்த அறையை மறந்ததால் விபரீதம் வடமாநில சுற்றுலா பயணிகள் அறைக்கு நிர்வாணமாக சென்ற ஐடி ஊழியர் கைது

சென்னை: சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், குடிபோதையில் முழு நிர்வாணமாக வடமாநில சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட ஐடி நிறுவன பொறியாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்ஆர்சி நகரில் பிரபலமான 5 நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் தங்கி வருகின்றனர். கடற்கரையை ஒட்டிய அமைதியான இடம் என்பதால், வடமாநில மக்களின் முதல் தேர்வாக இந்த நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்நிலையில், வடமாநில சுற்றுலா பயணிகள் தங்களது அறையில் நேற்று முன்தினம் இரவு இருந்தனர்.

அப்போது, மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர், முழு நிர்வாணமாக வடமாநில சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள அறைக்குள் நுழைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அறையில் இளம் பெண்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். இந்த அலறலை கேட்டு பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் ஓடிவந்து நிர்வாண வாலிபரை பிடித்தனர். அப்போது இந்த நபர் நீண்ட நேரமாக நிர்வாணமாக சுற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினர். உடனே வடமாநில சுற்றுலா பயணிகள் ஓட்டல் நிர்வாகத்திடம் வாலிபர் குறித்து புகார் அளித்தனர். அதன்படி ஓட்டல் நிர்வாகம் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி விரைந்து வந்த போலீசார் நிர்வாணமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது, சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் மென்பொறியாளர் என்றும், இவர், கடந்த இரண்டு நாட்களாக தனது பெண் தோழியுடன் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதிகளவில் மது போதையில் இருந்ததால் தனது பெண் தோழியுடன் தங்கி இருக்கும் அறை தெரியாமல் மற்றொரு அறைக்குள் புகுந்தது தெரியவந்தது. இருந்தாலும், வடமாநில சுற்றுலா பயணிகள் அளித்த புகாரின் படி, போலீசார் அத்துமீறி நிர்வாணமாக சுற்றிய ஐடி நிறுவன ஊழியரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பிரபல நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.

The post போதையில் தோழியுடன் தங்கியிருந்த அறையை மறந்ததால் விபரீதம் வடமாநில சுற்றுலா பயணிகள் அறைக்கு நிர்வாணமாக சென்ற ஐடி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Chennai ,Chennai MRC ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு;...