×

குந்தாவில் வருவாய் தீர்வாய கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: டிஆர்ஓ வழங்கினார்

மஞ்சூர், ஜூன் 25: குந்தா தாலுகாவில் 2 நாட்கள் நடந்த வருவாய் தீர்வாய கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வழங்கினார். நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கூட்டம் நடைபெற்றது. முதல் நாளில் குந்தா உள்வட்டத்திற்கான கீழ்குந்தா, கிண்ணக்கொரை, பாலகொலா, மேல்குந்தா உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கும் இரண்டாவது நாள் இத்தலார் உள்வட்டத்திற்கு உட்பட்ட இத்தலார், பிக்கட்டி மற்றும் முள்ளிகூர் பகுதிகளுக்கான வருவாய் தீர்வாய கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். குந்தா தாசில்தார் இந்திரா வரவேற்றார். துணை வட்டாட்சியர் நந்தகோபால், தனிவட்டாட்சியர் ஆனந்தி, குந்தா வட்டவழங்கல் அலுவலர் வேடியப்பன், வருவாய் ஆய்வாளர்கள் மணிமேகலை, சுரஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மேற்படி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தார்கள். பெரும்பாலும் முதியோர் உதவி தொகைகளை வழங்க கோரி ஏராளமானோர் மனு கொடுத்தனர். இதேபோல வீட்டுமனைப்பட்டா, குடிநீர், சாலைவசதி, தடுப்புச்சுவர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரியும் பொதுமக்கள் தரப்பில் இருந்து 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 63 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவி தொகை பெறுவதற்கான ஆணைகள், ஆதி திராவிடர்களுக்கான உதவிகள் என ரூ.1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசும்போது, தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ்குமார், ராஜன், மோகனபிரியா, ஸ்ரீதேவி, கௌசிக் மற்றும் பேரூராட்சி, மின்வாரியம், வனம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக குந்தா தாலுகாவில் சிறந்த கிராம நிர்வாக அலுவலராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

The post குந்தாவில் வருவாய் தீர்வாய கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: டிஆர்ஓ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kunta ,TRO ,Manjoor ,Kunta taluka ,Dinakaran ,
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை