×

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது: பக்தர்கள் நிம்மதி

திருமலை : திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி மலைப்பாதையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நடந்து சென்றனர். அப்போது கவுசிக் என்ற 3 வயது சிறுவனை பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கவ்வி கொண்டு சென்றது. இதனை கண்ட அங்கிருந்த போலீசார் கடை வியாபாரிகள் பக்தர்கள் செல்போனில் லைட் வெளிச்சம் காண்பித்து கூச்சலிட்டபடி விரட்டி சென்றனர்.

இதனால் 200 மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் தூக்கி சென்று சிறுவனை விடுவித்த சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களால் சிறுவன் மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வனத்துறை சார்பில் சிறுத்தையை பிடிப்பதற்காக 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து அப்பகுதியில் முதற்கட்டமாக 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

மேலும் 2 கூண்டுகள் வைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ேநற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட சிறுத்தை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா விலங்கியியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The post திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது: பக்தர்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati Alipiri ,Tirupati… ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி