×

ராணுவ வீரருடன் நாளை திருமணம் நடக்கவிருக்கும் முன்னாள் காதலியின் போட்டோவை இணைத்து வாலிபர் வாழ்த்து போஸ்டர்: போலீசில் பெற்றோர் புகார்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே ராணுவ வீரருடன் நாளை திருமணம் நடக்கவிருக்கும் முன்னாள் காதலியின் போட்டோவை தன்னுடன் இணைத்து வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரும் உறவினர் மகன் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரருடன் திருமணம் செய்ய சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து, இருவருக்கும் நாளை(25ம் தேதி) திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதையொட்டி, இருவீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், இளம்பெண் தனது காதலை கைவிட்டதால் விரக்தியடைந்த அந்த வாலிபர், தன்னுடன் அந்த பெண் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை போஸ்டராக அச்சிட்டு குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் வாழ்த்துக்கள் நண்பா… என அவரது நண்பர்கள் திருமணம் வாழ்த்து தெரிவிப்பதுபோல் இடம் பெற்று இருந்தது. இதை பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து போஸ்டர்களை கிழித்தனர். மேலும், நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரருடன் தங்களது மகளுக்கு திருமணம் நடத்த பாதுகாப்பு வழங்கக்கோரி பரதராமி போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின்பேரில் பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராணுவ வீரருடன் நாளை திருமணம் நடக்கவிருக்கும் முன்னாள் காதலியின் போட்டோவை இணைத்து வாலிபர் வாழ்த்து போஸ்டர்: போலீசில் பெற்றோர் புகார் appeared first on Dinakaran.

Tags : Wolliber ,Waliber ,
× RELATED குடிபோதையில் பைக் ஓட்டியதை பிடிக்க...